பிரியங்காவின் வருகையால் மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சிக்கு பாதிப்பு ஏற்படும் என்று கருத்துக்கணிப்பில் தெரிய வந்துள்ளது.
சோனியாகாந்தியின் மகன் ராகுல்காந்தி காங்கிரஸ் தலைவராக இருக்கும் நிலையில் மகள் பிரியங்கா காந்தியும் தீவிர அரசியலுக்கு வந்துள்ளார்.
பிரியங்காவை அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர்களில் ஒருவராக கடந்த மாதம் 23-ந்தேதி ராகுல்காந்தி அறிவித்தார்.
உத்தரபிரதேச மாநிலத்தில் கிழக்கு பகுதியில் உள்ள 42 பாராளுமன்ற தொகுதிகள் பிரியங்காவுக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்துக்கு வந்து பிரியங்கா பணிகளை தொடங்கினார்.
இதற்கிடையே பிரியங்கா வருகையால் காங்கிரசில் புத்துணர்ச்சி பிறக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இதற்கு சமீபத்தில் பதில் அளித்த ராகுல்காந்தி 2 மாத குறுகிய காலத்தில் எந்தவித அதிசயங்களையும் நிகழ்த்தி விட முடியாது என்று குறிப்பிட்டார். என்றாலும் ராகுலுவுடன் சேர்ந்து பிரியங்கா நாடு முழுவதும் பிரசாரம் செய்ய செல்வார் என்று கூறப்படுகிறது.
பிரியங்காவின் நாடு தழுவிய பிரசாரம் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று சமீபத்தில் கருத்து கணிப்பு நடத்தப்பட்டுள்ளது. ஏ.பி.பி. நியூஸ்- சி வோட்டர் நிறுவனங்கள் சார்பில் இந்த கருத்து கணிப்பு நடத்தப்பட்டுள்ளது. நேற்று அந்த கருத்து கணிப்பு முடிவுகள் வெளியிடப்பட்டன.
பிரியங்காவின் வருகையால் காங்கிரஸ் கட்சிக்கு நாடு முழுவதும் பலன் கிடைக்கும் என்று 50 சதவீதம் பேர் கூறி உள்ளனர். ஆனால் பிரியங்காவால் பெரிய அளவில் அரசியல் தாக்கத்தை ஏற்படுத்த முடியாது என்று 24 சதவீதம் பேர் கூறி உள்ளனர்.
பிரியங்காவின் வருகையால் மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சிக்கு ஆபத்து ஏற்படுமா? என்று ஒரு கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு 52 சதவீதம் பேர் பிரியங்காவால் பா.ஜனதாவுக்கு பாதிப்பு ஏற்படும் என்று கூறியுள்ளனர்.